Archives: மார்ச் 2020

சம்பாதிக்கப்பட்டதல்ல சுதந்தரிக்கப்பட்டது

உணவு விடுதியின் மேசையில் எனது டம்ளரை வைத்து விட்டு,  “இந்த உணவுக்காக உங்களுக்கு நன்றி கூறுகின்றேன், அப்பா” என்றேன். நான் கல்லூரியிலிருந்து ஒரு சிறிய விடுமுறையில் என்னுடைய வீட்டிற்கு வந்தேன். என்னுடைய உணவிற்கு என் பெற்றோர் பணம் கொடுத்தது எனக்கு சற்று வினோதமாக இருந்தது. “உன்னை வரவேற்கிறேன், ஜூலி” என்றார் என்னுடைய தந்தை. “நீ எல்லாவற்றிற்கும் எப்பொழுதும் நன்றி கூறத்தேவையில்லை, நீ இப்பொழுது எங்களை விட்டுப் பிரிந்து தனியாக இருந்தாலும், நீ எப்பொழுதும் எங்களுக்கு மகள் தான், எங்கள் குடும்பத்தில் ஓர் அங்கத்தினர் தான்” என்றார். நான் சிரித்துக் கொண்டே, “நன்றி, அப்பா” என்றேன்.

என்னுடைய குடும்பத்தில், என்னுடைய பெற்றோரின் அன்பினைப் பெறவும், அவர்கள் எனக்குச் செய்யும் அனைத்திற்காகவும், நான் எதையுமே செய்ததில்லை. என்னுடைய அப்பா கூறியதைப் போல, நான் தேவனுடைய குடும்பத்தில் ஒருவராக இருக்கும் தகுதியைப் பெறுவதற்கும், நான் எதையுமே செய்ததில்லை என்பதை நினைத்துக் கொண்டேன்.

“தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாய் இருப்பதற்கு” தேவன் நம்மைத் தெரி ந்து கொண்டார் என பவுல் தன்னுடைய வாசகர்களுக்கு எழுதுகின்றார் (எபே.1:4). தேவனுக்கு முன்பாக கறைதிரையற்றவர்களாய் நிற்க தகுதியுள்ளவர்களாகும்படி அவர் நம்மைத் தெரிந்து கொண்டார் (5:25-27). ஆனால், இது இயேசு கிறிஸ்துவினால் மட்டுமே கூடும். “அவருடைய கிருபையின் ஐசுவரியத்திபடியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது” (1:7). நாம் தேவனுடைய கிருபையையும், மன்னிப்பையும் பெறுவதும், மற்றும் அவருடைய குடும்பத்தில் ஒருவராவதும் நம்முடைய செயலினால் சம்பாதித்ததல்ல, இவற்றை நாம் தேவனிடமிருந்து ஈவாக பெற்றுக் கொள்கின்றோம்.

நம்முடைய வாழ்வை தேவனுக்கு நேராகத் திருப்பும் போது, நாம் தேவனுடைய பிள்ளைகளாகின்றோம், அப்படியானால் நாம் நித்திய வாழ்வையும் பெற்றுக் கொள்கின்றோம், நாம் சுதந்தரித்துக் கொள்ளும்படி பரலோகம் நமக்கு காத்திருக்கின்றது. இத்தனை அற்புதமான ஈவைத் தந்த தேவனை ஸ்தோத்தரிப்போம்!

ஆசீர்வதிக்கப்பட்ட அப்பம்

எங்களுடைய மூத்த மகள் பதின்மூன்றாம் வயதை எட்டிய போது, என்னுடைய மனைவியும், நானும் சேர்ந்து அவளுடைய சிறுபிராயத்திலிருந்து அவளுடைய வாழ்க்கையைப் பற்றி நாங்கள் எழுதிவைத்திருந்த தொகுப்புகள் அடங்கிய புத்தகத்தை, அவளுக்குப் பரிசாகக் கொடுத்தோம். அதில் அவளுடைய விருப்புகள், வெறுப்புகள், தனித்திறன்கள், மறக்க முடியாத சில பேச்சுகள், நகைப்பைத்தரும் சில நிகழ்வுகள் ஆகியவற்றைக் குறித்து வைத்திருந்தோம். தேவன் அவளில் செயல்படும் விதத்தை நாங்கள் கண்டதையும் நீண்ட கடிதமாக எழுதிவைத்திருந்தோம். அவளுடைய பதின்மூன்றாம் பிறந்த நாளில், நாங்கள் அதனை அவளுக்குக் கொடுத்த போது, அது அவளை மெய் மறக்கச் செய்தது. அவள் தன்னுடைய தனித்துவத்தை அறிந்துகொள்ள, அது ஒரு வாய்ப்பாக அமைந்தது.

ஒரு சாதாரண பொருளான அப்பத்தை ஆசீர்வதித்ததின் மூலம், இயேசு அதன் தனித்துவத்தை வெளிப்படுத்துகின்றார். அவர் படைத்த மற்ற படைப்புகளோடு, தேவன் அப்பத்தை அவருடைய மகிமையை வெளிப்படுத்துவதற்காகப் படைத்தார். இதன் மூலம், இவ்வுலகத்தின் எதிர் காலத்தைப் பற்றி குறிப்பிடுகின்றார் என நான் நம்புகின்றேன். ஒரு நாள், அவருடைய படைப்புகள் அனைத்தும் அவருடைய மகிமையால் நிரப்பப்படும். எனவே, இயேசு அப்பத்தை எடுத்து ஆசீர்வதிக்கும் போது (மத்.26:26), படைப்புகளின் துவக்கத்தையும், அவற்றின் முடிவையும் குறித்து சுட்டிக் காட்டுகின்றார் (ரோம. 8:20-21).

உன்னுடைய வாழ்க்கைக் கதையின் துவக்கம் குழப்பம் நிறைந்ததாக இருக்கலாம், உனக்கும் ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பதை நீ உணராமல் இருக்கலாம். ஆனால் மிகப் பெரிய கதை ஒன்று உள்ளது. தேவன் உன்னை விருப்பத்தோடு, ஒரு நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக உருவாக்கினார், அவர் உன்னில் மகிழ்ச்சியடைகின்றார் என்பதே அந்தக் கதை. உன்னை மீட்பதற்பதற்காக தேவன் உன்னைத் தேடி வந்தார் என்பதைக் கூறும் கதை (மத். 26:28); தேவன் தம்முடைய பரிசுத்த ஆவியை உனக்குத் தந்து, உன்னை புதியதாக்கி, உன்னுடைய அடையாளத்தை மீட்டுக் கொடுத்தார், அவர் உன்னை ஆசீர்வதிக்க விரும்புகின்றார் என்பதைக் கூறும் கதை அது.

பழச்சாறு

பேரம் பேசி, மிகச் சரியான விலைக்கு, அந்த விளக்கு வாங்கப்பட்டது. அது என் வீட்டு அலுவலகத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும், அதன் நிறம், அளவு மற்றும் விலை மிகப்பொருத்தமாக அமைந்தது. வீட்டிற்கு வந்ததும் அந்த விளக்கிற்கு மின் இணைப்பு கொடுத்தபோது ஒன்றும் நடக்கவில்லை, விளக்கும் எரியவில்லை!

“பிரச்சனை ஒன்றுமில்லை, நான் அதனை எளிதில் சரிபார்த்து விடுவேன்” என்று உறுதியளித்தார் என்னுடைய கணவர். அவர் அந்த விளக்கைப் பிரித்துப் பார்த்தார், அதன் பிரச்சனையை எளிதில் கண்டுகொண்டார். அங்கு மின் இணைப்புக் கம்பி, எதனோடும் பொருத்தப்படவில்லை, மின் ஆற்றல் மூலத்தோடு இணைக்கப் படாவிட்டால் அந்த நேர்த்தியான அழகிய விளக்கு பயனற்றதாகிவிடும். 

இது நம்முடைய வாழ்விற்கும் பொருத்தமானது. இயேசு தன் சீஷர்களிடம், “நானே திராட்சச் செடி, நீங்கள் கொடிகள், ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக் கூடாது” (யோவா. 15:5) என்று கூறுகின்றார்.

இயேசு இந்தப் போதனையை, திராட்சை அதிகம் விளையும் பகுதியில் கொடுத்தார், எனவே அவருடைய சீஷர்கள் எளிதில் புரிந்து கொண்டனர். திராட்சைச் செடிகள் கடினமான சூழல்களையும் தாங்கக் கூடியன, அதன் கொடிகள் அதிகம் வெட்டப் பட்டாலும் வளரக் கூடியன. ஆனால் முக்கிய செடியிலிருந்து அவை வெட்டப்பட்டு, தனிமையாக்கப்பட்டால் அவை பயனற்றவையாகிவிடும், எரிக்கப் படும் விறகாகிவிடும். அதேப் போலத்தான் நம்முடைய வாழ்வும் இருக்கும்.

நாம் இயேசுவில் நிலைத்திரு க்கும் போது, அவருடைய வார்த்தைகள் நமக்கு ஜீவனைத்தரும், நாமும் நமக்கு ஜீவன் தரும் மூலமாகிய கிறிஸ்துவோடு இணைக்கப் பட்டிருப்போம். “நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப் படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்” (வச. 8) என்றார். மிகுந்த கனிகளைக் கொடுக்க வேண்டுமென்றால் அனுதினமும் சத்தான உணவு கொடுக்கப்பட வேண்டும். தேவன் நமது ஆத்துமாவிற்குத் தேவையான உணவை வேதாகமத்தின் மூலமாகவும், அவருடைய அன்பினாலும் இலவசமாகக் கொடுக்கின்றார். எனவே, தேவனோடு எப்பொழுதும் இணக்கப் பட்டிருங்கள், அவருடைய சாறு உங்களுக்குள்ளே பாயட்டும்!

வருங்கால மரம் வெட்டி

நான் கல்லூரியில் இருந்த போது, ஓர் ஆண்டு விறகு கட்டைகளை வெட்டி, சேர்த்து வைத்து, விற்று, விநியோகித்து வந்தேன். அது ஒரு கடினமான வேலை. எனவே 2 இராஜாக்கள் 6ஆம் அதிகாரத்தில் குறிப்பிட்டுள்ள துரதிஷ்டவசமான மரம் வெட்டியைக் குறித்துப் பரிதாபப் படுவேன்.

எலிசாவோடிருந்த தீர்க்கதரிசிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், அவர்கள் தங்கும் இடம் அவர்களுக்குப் போதுமானதாக இல்லை. எனவே அவர்கள் யோர்தான் நதியண்டை சென்று மரம் வெட்டி வந்து, தங்களுக்கு ஒரு இடத்தை ஆயத்தப் படுத்த திட்டமிட்டனர். இதற்கு எலிசாவும் சம்மதித்து அவர்களோடு சென்றார். வேலை நன்றாகச் சென்று கொண்டிருந்த போது, ஒருவரின் கோடாரி தண்ணீரில் விழுந்தது (வச. 5).

எலிசா தன்னுடைய குச்சியால் தண்ணீருக்கு அடியில் தேடிப் பார்த்து, அதன் இருப்பிடத்தைக் கண்டு பிடித்து, அதனை வெளியே எடுத்திருக்கலாம் என ஒருவர் சொல்லக் கூடும். அப்படியும் செய்திருக்கலாம், ஆனால் அப்படியல்ல, அங்கு ஒரு அற்புதம் நடைபெற்றது. அந்தக் கோடாரியின் தலைப் பகுதியை தேவனுடைய கரம் அசைத்தது, அதனை நீரின் மேல் மிதக்கும்படி செய்தார், எனவே அந்த மனிதனால் அதனை மீண்டும் எடுத்துக் கொள்ள முடிந்தது (வச. 6-7).

இந்த அற்புதம் நாம் மனதில் வைத்துக் கொள்ளக் வேண்டிய ஓர் ஆழ்ந்த உண்மையை நமக்கு வெளிப்படுத்துகின்றது. நம் வாழ்வின் சிறிய காரியங்களில் கூட தேவன் கரிசனையுள்ளவராய் இருக்கிறார் – சிறிய காரியங்களான, கோடாரி, சாவி, மூக்குக் கண்ணாடி, அலைபேசி போன்றவை தொலைந்து போனால் கூட, அது நம்மைப் பதறச் செய்யும் என்பதை தேவன் புரிந்து கொள்கின்றார். அவர் எப்பொழுதும் தொலைந்தவற்றை மீட்டுத் தருபவர் அல்ல, மாறாக அவர் நம்முடைய கவலையைப் புரிந்து கொண்டு, நம்மைத் தேற்றுபவராக இருக்கின்றார்.

தேவன் நம்மை இரட்சித்தார் என்ற உறுதியைப் பெற்றுக் கொண்டதோடு, தேவன் நம்மைப் பாதுகாக்கிறார் என்ற உறுதியையும் பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த உறுதி இல்லையென்றால், நாம் இவ்வுலகில் தனிமையை உணர்வோம், அநேகக் கவலைகளுக்குள்ளாவோம். தேவன் நம்மைப் பாதுகாக்கிறார், நம்முடைய இழப்புகளில், அவை சிறியதாக இருப்பினும் அவற்றில் பங்கு பெறுகின்றார், நம்மீது அவர் அக்கறை கொண்டுள்ளார் என்பதைத் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

பொய்களும் உண்மையும்

 

அடால்ஃப் ஹிட்லர், சிறிய பொய்களைவிட பெரிய பொய்கள் சக்திவாய்ந்தவை என்று நம்பினார். மேலும் அவர் தனது கோட்பாட்டை வெற்றிகரமாக பரிசோதித்தார். அவரது அரசியல் வாழ்க்கையின் ஆரம்பத்தில், அவர் மற்றவர்களின் கருத்துக்களை ஆதரிப்பதில் திருப்தி அடைவதாகக் கூறினார். அவர் ஆட்சிக்கு வந்ததும், யாரையும் துன்புறுத்தவேண்டும் என்ற எண்ணம் தனது கட்சிக்கு இல்லை என்றார். பின்னர், ஊடகங்களை பயன்படுத்தி தன்னை தகப்பனாகவும் ஒழுக்க நெறியாளராகவும் சித்தரித்தார்.

சாத்தான் நம் வாழ்வில் வல்லமை பெற பொய்களைப் பயன்படுத்துகிறான். அனைத்து தருணங்களிலும், அவன் பயம், கோபம் மற்றும் விரக்தியைத் தூண்டுகிறான். ஏனெனில் அவன் “பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாய்” இருக்கிறான் (யோவான் 8:44). சாத்தானால் உண்மையைச் சொல்லமுடியாது, ஏனென்றால் இயேசு சொன்னதுபோல், அவனுக்குள் எந்த உண்மையும் இல்லை.

சாத்தானின் பொய்களில் சிலவைகள் இங்கே. முதலில், நமது பிரார்த்தனைகள் முக்கியமில்லை என்பதே. “நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும்பெலனுள்ளதாயிருக்கிறது” (யாக்கோபு 5:16) என்று வேதம் சொல்லுகிறது. இரண்டாவது பொய், “நாம் சிக்கலில் இருக்கும்போது, அதிலிருந்து வெளியேற வழியே இல்லை” என்பதே. இதுவும் தவறானது. “தேவனாலே எல்லாம் கூடும்” (மாற்கு 10:27) என்றும் “சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்” (1 கொரிந்தியர் 10:13) என்றும் வேதம் வாக்களிக்கிறது. மூன்றாவதாக, “தேவன் நம்மை நேசிப்பதில்லை” என்னும் பொய். அது உண்மையல்ல. நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள “தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாது” (ரோமர் 8:38-39).

தேவனுடைய சத்தியம் பொய்யைவிட சக்தி வாய்ந்தது. இயேசுவின் போதனைக்கு நாம் அவருடைய வல்லமையில் கீழ்ப்படிந்தால், நாம் “சத்தியத்தை அறிவோம்”, பொய்யானதை நிராகரிப்போம். “சத்தியம் நம்மை விடுதலையாக்கும்” (யோவான் 8:31-32). 

 

மகிழ்ச்சியும் ஞானமும்

ஜப்பானில் ஒவ்வொரு வசந்த காலத்திலும் இனிமையான நறுமணப் பூக்கள் நேர்த்தியான வெளிர் மற்றும் துடிப்பான இளஞ்சிவப்புகளால் நிரப்பப்படுகின்றன. இது குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் உணர்வுகளை மகிழ்விக்கிறது. குறுகிய காலம் மட்டுமே இருக்கக்கூடிய அந்த மலர்கள் ஜப்பானியர்களிடம், குறுகிய வாழ்க்கை அனுபவத்தின் மேன்மையை தன் அழகினாலும் வாசனையினாலும் ஏற்படுத்திச் செல்கிறது. திடீரென்று ஏற்படும் மகிழ்ச்சி மாற்றத்தை அவர்கள் “வாழ்வின் நிலையற்ற தன்மை” என்று அழைக்கிறார்கள்.

மனிதர்களாகிய நாம் மகிழ்ச்சியின் உணர்வுகளைத் தேடவும் அதில் நீடிக்கவும் விரும்புகிறோம் என்பது புரிந்துகொள்ளத்தக்கது. ஆயினும்கூட, வாழ்க்கை கஷ்டங்களால் நிரம்பியுள்ளது என்பதன் அர்த்தம், அன்பான தேவன் மீதான நம்பிக்கை என்னும் பூதக்கண்ணாடியின் மூலம் வலி மற்றும் இன்பம் இரண்டையும் பார்க்கும் திறனை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். நாம் அவிசுவாசத்துடனோ இருக்கவோ அல்லது வாழ்க்கையைப் பற்றிய யதார்த்தமற்ற பார்வையை நாமே உருவாக்கிக்கொள்ளவோ அவசியமில்லை.

பிரசங்கி புத்தகம் நமக்கு ஒரு பயனுள்ள மாதிரியை வழங்குகிறது. இந்த புத்தகம் சில நேரங்களில் எதிர்மறையான அறிக்கைகளின் பட்டியலாக கருதப்பட்டாலும், “எல்லாம் மாயை” (1:2) என்று எழுதிய அதே சாலெமோன் ராஜா, “வேறொரு நன்மையும் இல்லை” என்று கூறி, வாழ்க்கையில் எளிமையான விஷயங்களில் மகிழ்ச்சியைக் காண வாசகர்களை ஊக்குவிக்கிறார். “புசிப்பதும் குடிப்பதும் மகிழ்வதுமேயல்லாமல் சூரியனுக்குக்கீழே மனுஷனுக்கு வேறொரு நன்மையும் இல்லை” (8:15).

அழகான பருவங்களிலும் கடினமான காலங்களிலும் (3:11-14; 7:13-14), பரலோகப்பார்வையில் எதுவுமே நிரந்தரமானது இல்லை என்பதை அறிந்து, ஞானத்தை அடையவும் தேவனுடைய கிரியைகளை பார்க்கும்படியும் உதவிசெய்யும்படி (வச. 16-17) தேவனிடம் நாம் கேட்கும்போது நமக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. 

 

சரியாய் எதிர்வினையாற்றுங்கள்

கௌரவால் தன் கண்களை நம்ப முடியவில்லை. "அவர்கள் ஏன் இந்த வெள்ளை உடையில் இருக்கும் நல்ல மாமாவை அடிக்கிறார்கள்" என்று எண்ணினான். அவன் இயேசுவைப் போல உடையணிந்த ஒரு நபர் தெருக்களில் ஊர்வலமாகச் செல்வதையும் , போலி இரத்தம் சொட்டச் சொட்டவும், வீரர்களைப் போல உடையணிந்தவர்களால் சாட்டையால் அடிக்கப்படுவதையும் கண்டான். அது ஒரு சபையின் புனித வெள்ளி பவனி. ஆனால் அந்த காட்சி கௌரவுக்கு மிகவும் நிஜமாக இருந்தது. கௌரவ் ஒரு மனநலிவு நோயாளி, மேலும் அவனது நிலை அவனை மிகவும் ஆர்வத்துடனும் இரக்கத்துடனும் இருக்கும்படி செய்தது. அம்மாவின் புடவையில் முகத்தைப் புதைத்துக்கொண்டு, “அம்மா, தயவு செய்து அவர்களை நிறுத்தச் சொல்லுங்கள்!” என்று புலம்பியபடியே அவன் இதயம் இரக்கத்தால் நிறைந்தது.

கௌரவரைப் போல இரக்கமுள்ளவர்களாக இருக்க நாம் அழைக்கப்படுகிறோம். சிலருக்கு எளிதில் இரக்கம் உண்டாகலாம் என்றாலும், மற்ற நமக்கோ அதைப் பயிற்சி செய்ய வேண்டும். கொலோசெ சபையினர்க்கு தங்கள் பழைய வாழ்க்கை முறையை "அகற்ற" வலுவாக வலியுறுத்தப்பட்டது. அழுக்காகவும் கந்தையாகவும் இருந்த ஆடையைத் தூக்கி எறிவது போல, கோபம், மூர்க்கம் , பொறாமை, வாயில் பிறக்கலாகாத தூஷணம், வம்பு வார்த்தைகள் (வ.8) ஆகியவற்றைக் கொண்டிருந்த தங்கள் உலகத்துக்குரிய சுபாவத்தைக் களைந்துவிடும்படி அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். மாறாக, இரக்கம், தயவு, மனத்தாழ்மை மற்றும்நீடிய பொறுமை (V.12)ஆகிய நற்பண்புகளை அணிந்துகொள்ள அவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர், அவை " இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும்" (சங்கீதம் 145:8). கொண்ட தங்கள் சிருஷ்டிகரைப் பிரதிபலிக்கின்றன.

இரக்கம், கருணை, தாழ்மை மற்றும் தயவு ஆகியவை இன்றைய உலகில் பெரும்பாலும் பலவீனங்களாகக் கருதப்படுகின்றன. ஆனாலும் இதைத்தான் மற்றவர்கள் நம்மில் பார்க்க வேண்டும், அனுபவிக்க வேண்டும் (வ.12). சக பணியாளர்கள், அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடனான நமது அனுதின உறவுகளில் இந்த குணாதிசயங்களுடன் செயல்படுவது எப்போதும் எளிதானது அல்ல. ஆனால் சூழ்நிலைகள் எப்படிப்பட்டதாயினும் நாம் சரியாக எதிர்வினையாற்ற உறுதிகொள்ள வேண்டும், ஏனெனில் இந்த வழிமுறையில்தான் நாம் கிறிஸ்துவின் சீடர்கள் என்பதை உலகம் அறியும் ரெபேக்கா விஜயன்