Archives: மார்ச் 2020

சம்பாதிக்கப்பட்டதல்ல சுதந்தரிக்கப்பட்டது

உணவு விடுதியின் மேசையில் எனது டம்ளரை வைத்து விட்டு,  “இந்த உணவுக்காக உங்களுக்கு நன்றி கூறுகின்றேன், அப்பா” என்றேன். நான் கல்லூரியிலிருந்து ஒரு சிறிய விடுமுறையில் என்னுடைய வீட்டிற்கு வந்தேன். என்னுடைய உணவிற்கு என் பெற்றோர் பணம் கொடுத்தது எனக்கு சற்று வினோதமாக இருந்தது. “உன்னை வரவேற்கிறேன், ஜூலி” என்றார் என்னுடைய தந்தை. “நீ எல்லாவற்றிற்கும் எப்பொழுதும் நன்றி கூறத்தேவையில்லை, நீ இப்பொழுது எங்களை விட்டுப் பிரிந்து தனியாக இருந்தாலும், நீ எப்பொழுதும் எங்களுக்கு மகள் தான், எங்கள் குடும்பத்தில் ஓர் அங்கத்தினர் தான்” என்றார். நான் சிரித்துக் கொண்டே, “நன்றி, அப்பா” என்றேன்.

என்னுடைய குடும்பத்தில், என்னுடைய பெற்றோரின் அன்பினைப் பெறவும், அவர்கள் எனக்குச் செய்யும் அனைத்திற்காகவும், நான் எதையுமே செய்ததில்லை. என்னுடைய அப்பா கூறியதைப் போல, நான் தேவனுடைய குடும்பத்தில் ஒருவராக இருக்கும் தகுதியைப் பெறுவதற்கும், நான் எதையுமே செய்ததில்லை என்பதை நினைத்துக் கொண்டேன்.

“தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாய் இருப்பதற்கு” தேவன் நம்மைத் தெரி ந்து கொண்டார் என பவுல் தன்னுடைய வாசகர்களுக்கு எழுதுகின்றார் (எபே.1:4). தேவனுக்கு முன்பாக கறைதிரையற்றவர்களாய் நிற்க தகுதியுள்ளவர்களாகும்படி அவர் நம்மைத் தெரிந்து கொண்டார் (5:25-27). ஆனால், இது இயேசு கிறிஸ்துவினால் மட்டுமே கூடும். “அவருடைய கிருபையின் ஐசுவரியத்திபடியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது” (1:7). நாம் தேவனுடைய கிருபையையும், மன்னிப்பையும் பெறுவதும், மற்றும் அவருடைய குடும்பத்தில் ஒருவராவதும் நம்முடைய செயலினால் சம்பாதித்ததல்ல, இவற்றை நாம் தேவனிடமிருந்து ஈவாக பெற்றுக் கொள்கின்றோம்.

நம்முடைய வாழ்வை தேவனுக்கு நேராகத் திருப்பும் போது, நாம் தேவனுடைய பிள்ளைகளாகின்றோம், அப்படியானால் நாம் நித்திய வாழ்வையும் பெற்றுக் கொள்கின்றோம், நாம் சுதந்தரித்துக் கொள்ளும்படி பரலோகம் நமக்கு காத்திருக்கின்றது. இத்தனை அற்புதமான ஈவைத் தந்த தேவனை ஸ்தோத்தரிப்போம்!

ஆசீர்வதிக்கப்பட்ட அப்பம்

எங்களுடைய மூத்த மகள் பதின்மூன்றாம் வயதை எட்டிய போது, என்னுடைய மனைவியும், நானும் சேர்ந்து அவளுடைய சிறுபிராயத்திலிருந்து அவளுடைய வாழ்க்கையைப் பற்றி நாங்கள் எழுதிவைத்திருந்த தொகுப்புகள் அடங்கிய புத்தகத்தை, அவளுக்குப் பரிசாகக் கொடுத்தோம். அதில் அவளுடைய விருப்புகள், வெறுப்புகள், தனித்திறன்கள், மறக்க முடியாத சில பேச்சுகள், நகைப்பைத்தரும் சில நிகழ்வுகள் ஆகியவற்றைக் குறித்து வைத்திருந்தோம். தேவன் அவளில் செயல்படும் விதத்தை நாங்கள் கண்டதையும் நீண்ட கடிதமாக எழுதிவைத்திருந்தோம். அவளுடைய பதின்மூன்றாம் பிறந்த நாளில், நாங்கள் அதனை அவளுக்குக் கொடுத்த போது, அது அவளை மெய் மறக்கச் செய்தது. அவள் தன்னுடைய தனித்துவத்தை அறிந்துகொள்ள, அது ஒரு வாய்ப்பாக அமைந்தது.

ஒரு சாதாரண பொருளான அப்பத்தை ஆசீர்வதித்ததின் மூலம், இயேசு அதன் தனித்துவத்தை வெளிப்படுத்துகின்றார். அவர் படைத்த மற்ற படைப்புகளோடு, தேவன் அப்பத்தை அவருடைய மகிமையை வெளிப்படுத்துவதற்காகப் படைத்தார். இதன் மூலம், இவ்வுலகத்தின் எதிர் காலத்தைப் பற்றி குறிப்பிடுகின்றார் என நான் நம்புகின்றேன். ஒரு நாள், அவருடைய படைப்புகள் அனைத்தும் அவருடைய மகிமையால் நிரப்பப்படும். எனவே, இயேசு அப்பத்தை எடுத்து ஆசீர்வதிக்கும் போது (மத்.26:26), படைப்புகளின் துவக்கத்தையும், அவற்றின் முடிவையும் குறித்து சுட்டிக் காட்டுகின்றார் (ரோம. 8:20-21).

உன்னுடைய வாழ்க்கைக் கதையின் துவக்கம் குழப்பம் நிறைந்ததாக இருக்கலாம், உனக்கும் ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பதை நீ உணராமல் இருக்கலாம். ஆனால் மிகப் பெரிய கதை ஒன்று உள்ளது. தேவன் உன்னை விருப்பத்தோடு, ஒரு நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக உருவாக்கினார், அவர் உன்னில் மகிழ்ச்சியடைகின்றார் என்பதே அந்தக் கதை. உன்னை மீட்பதற்பதற்காக தேவன் உன்னைத் தேடி வந்தார் என்பதைக் கூறும் கதை (மத். 26:28); தேவன் தம்முடைய பரிசுத்த ஆவியை உனக்குத் தந்து, உன்னை புதியதாக்கி, உன்னுடைய அடையாளத்தை மீட்டுக் கொடுத்தார், அவர் உன்னை ஆசீர்வதிக்க விரும்புகின்றார் என்பதைக் கூறும் கதை அது.

பழச்சாறு

பேரம் பேசி, மிகச் சரியான விலைக்கு, அந்த விளக்கு வாங்கப்பட்டது. அது என் வீட்டு அலுவலகத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும், அதன் நிறம், அளவு மற்றும் விலை மிகப்பொருத்தமாக அமைந்தது. வீட்டிற்கு வந்ததும் அந்த விளக்கிற்கு மின் இணைப்பு கொடுத்தபோது ஒன்றும் நடக்கவில்லை, விளக்கும் எரியவில்லை!

“பிரச்சனை ஒன்றுமில்லை, நான் அதனை எளிதில் சரிபார்த்து விடுவேன்” என்று உறுதியளித்தார் என்னுடைய கணவர். அவர் அந்த விளக்கைப் பிரித்துப் பார்த்தார், அதன் பிரச்சனையை எளிதில் கண்டுகொண்டார். அங்கு மின் இணைப்புக் கம்பி, எதனோடும் பொருத்தப்படவில்லை, மின் ஆற்றல் மூலத்தோடு இணைக்கப் படாவிட்டால் அந்த நேர்த்தியான அழகிய விளக்கு பயனற்றதாகிவிடும். 

இது நம்முடைய வாழ்விற்கும் பொருத்தமானது. இயேசு தன் சீஷர்களிடம், “நானே திராட்சச் செடி, நீங்கள் கொடிகள், ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக் கூடாது” (யோவா. 15:5) என்று கூறுகின்றார்.

இயேசு இந்தப் போதனையை, திராட்சை அதிகம் விளையும் பகுதியில் கொடுத்தார், எனவே அவருடைய சீஷர்கள் எளிதில் புரிந்து கொண்டனர். திராட்சைச் செடிகள் கடினமான சூழல்களையும் தாங்கக் கூடியன, அதன் கொடிகள் அதிகம் வெட்டப் பட்டாலும் வளரக் கூடியன. ஆனால் முக்கிய செடியிலிருந்து அவை வெட்டப்பட்டு, தனிமையாக்கப்பட்டால் அவை பயனற்றவையாகிவிடும், எரிக்கப் படும் விறகாகிவிடும். அதேப் போலத்தான் நம்முடைய வாழ்வும் இருக்கும்.

நாம் இயேசுவில் நிலைத்திரு க்கும் போது, அவருடைய வார்த்தைகள் நமக்கு ஜீவனைத்தரும், நாமும் நமக்கு ஜீவன் தரும் மூலமாகிய கிறிஸ்துவோடு இணைக்கப் பட்டிருப்போம். “நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப் படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்” (வச. 8) என்றார். மிகுந்த கனிகளைக் கொடுக்க வேண்டுமென்றால் அனுதினமும் சத்தான உணவு கொடுக்கப்பட வேண்டும். தேவன் நமது ஆத்துமாவிற்குத் தேவையான உணவை வேதாகமத்தின் மூலமாகவும், அவருடைய அன்பினாலும் இலவசமாகக் கொடுக்கின்றார். எனவே, தேவனோடு எப்பொழுதும் இணக்கப் பட்டிருங்கள், அவருடைய சாறு உங்களுக்குள்ளே பாயட்டும்!

வருங்கால மரம் வெட்டி

நான் கல்லூரியில் இருந்த போது, ஓர் ஆண்டு விறகு கட்டைகளை வெட்டி, சேர்த்து வைத்து, விற்று, விநியோகித்து வந்தேன். அது ஒரு கடினமான வேலை. எனவே 2 இராஜாக்கள் 6ஆம் அதிகாரத்தில் குறிப்பிட்டுள்ள துரதிஷ்டவசமான மரம் வெட்டியைக் குறித்துப் பரிதாபப் படுவேன்.

எலிசாவோடிருந்த தீர்க்கதரிசிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், அவர்கள் தங்கும் இடம் அவர்களுக்குப் போதுமானதாக இல்லை. எனவே அவர்கள் யோர்தான் நதியண்டை சென்று மரம் வெட்டி வந்து, தங்களுக்கு ஒரு இடத்தை ஆயத்தப் படுத்த திட்டமிட்டனர். இதற்கு எலிசாவும் சம்மதித்து அவர்களோடு சென்றார். வேலை நன்றாகச் சென்று கொண்டிருந்த போது, ஒருவரின் கோடாரி தண்ணீரில் விழுந்தது (வச. 5).

எலிசா தன்னுடைய குச்சியால் தண்ணீருக்கு அடியில் தேடிப் பார்த்து, அதன் இருப்பிடத்தைக் கண்டு பிடித்து, அதனை வெளியே எடுத்திருக்கலாம் என ஒருவர் சொல்லக் கூடும். அப்படியும் செய்திருக்கலாம், ஆனால் அப்படியல்ல, அங்கு ஒரு அற்புதம் நடைபெற்றது. அந்தக் கோடாரியின் தலைப் பகுதியை தேவனுடைய கரம் அசைத்தது, அதனை நீரின் மேல் மிதக்கும்படி செய்தார், எனவே அந்த மனிதனால் அதனை மீண்டும் எடுத்துக் கொள்ள முடிந்தது (வச. 6-7).

இந்த அற்புதம் நாம் மனதில் வைத்துக் கொள்ளக் வேண்டிய ஓர் ஆழ்ந்த உண்மையை நமக்கு வெளிப்படுத்துகின்றது. நம் வாழ்வின் சிறிய காரியங்களில் கூட தேவன் கரிசனையுள்ளவராய் இருக்கிறார் – சிறிய காரியங்களான, கோடாரி, சாவி, மூக்குக் கண்ணாடி, அலைபேசி போன்றவை தொலைந்து போனால் கூட, அது நம்மைப் பதறச் செய்யும் என்பதை தேவன் புரிந்து கொள்கின்றார். அவர் எப்பொழுதும் தொலைந்தவற்றை மீட்டுத் தருபவர் அல்ல, மாறாக அவர் நம்முடைய கவலையைப் புரிந்து கொண்டு, நம்மைத் தேற்றுபவராக இருக்கின்றார்.

தேவன் நம்மை இரட்சித்தார் என்ற உறுதியைப் பெற்றுக் கொண்டதோடு, தேவன் நம்மைப் பாதுகாக்கிறார் என்ற உறுதியையும் பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த உறுதி இல்லையென்றால், நாம் இவ்வுலகில் தனிமையை உணர்வோம், அநேகக் கவலைகளுக்குள்ளாவோம். தேவன் நம்மைப் பாதுகாக்கிறார், நம்முடைய இழப்புகளில், அவை சிறியதாக இருப்பினும் அவற்றில் பங்கு பெறுகின்றார், நம்மீது அவர் அக்கறை கொண்டுள்ளார் என்பதைத் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

விசுவாசத்தின் ஜெயம்

நான்கு வயது சிறுவனான கால்வினின் வழக்கமான சரீர ஆரோக்கிய சோதனையில் அவனது உடலில் சில எதிர்பாராத புள்ளிகள் கண்டறியப்பட்டன. அவனுக்கு சில மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு, ஊசி போடப்பட்டு, அந்த இடத்தை கட்டுகட்டி அனுப்பினர். அந்த கட்டை அகற்றும் நாளில், அவனுடைய தந்தை கட்டை பிரிக்க முயன்றபோது, கால்வின் பயத்துடன் சிணுங்கினான். மகனுக்கு ஆறுதல் கூற முயன்று, அவனது தந்தை, “கால்வின், உன்னைக் காயப்படுத்தும் எதையும் நான் ஒருபோதும் செய்யமாட்டேன் என்று உனக்குத் தெரியும்!" என்று சொன்னார். கட்டை அகற்றும் பயத்தைவிட, தன் மகன் தன்னை நம்பவேண்டும் என்று அவனது தந்தை விரும்பினார்.

அசௌகரியத்தினால் நான்கு வயது குழந்தைகள் மட்டும் பயம் அடைவதில்லை. அறுவைசிகிச்சைகள், அன்புக்குரியவர்களிடமிருந்து பிரிதல், மன அல்லது உளவியல் சவால்கள் மற்றும் பலவிதமான பயங்கள், பெருமூச்சுகள், அழுகைகள் மற்றும் கூக்குரல்களை சந்திக்கும் அனைத்து தரப்பினர்களும் பயத்தினால் சூழப்படுகின்றனர். 

தாவீது, தன்மீது பொறாமைகொண்டு தன்னை கொல்ல வகைதேடிய சவுலிடமிருந்து தப்பித்து பெலிஸ்திய தேசத்திற்கு ஓடியபோதிலும், அங்கு அவர் கண்டுபிடிக்கப்பட்ட தருணம், வாழ்க்கையின் பயம் மிகுந்த ஓர் தருணமாயிருந்துள்ளது. அவர் அடையாளம் காணப்பட்டபோது, அவருக்கு என்ன நேரிடும் என்று கவலைப்பட்டார். (1 சாமுவேல் 21:10-11): “தாவீது... காத்தின் ராஜாவாகிய ஆகீசுக்கு மிகவும் பயப்பட்டான்.” இந்த சங்கடமான சூழ்நிலையைப் பற்றி யோசித்து, தாவீது “நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்… தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்” (சங்கீதம் 56:3-4) என்று எழுதுகிறார். 

வாழ்க்கையின் அசௌகரியங்கள் நமக்கு அச்சத்தைத் தூண்டும்போது நாம் என்ன செய்வோம்? நம்முடைய பரலோகத் தகப்பன்மீது நம்பிக்கை வைக்கலாம்.

 

ஜெபம் முக்கியமானது

“நடக்கவிருக்கும் மூளை ஸ்கேனுக்கான பிரார்த்தனைகள்;” “என் குழந்தைகள் மீண்டும் தேவாலயத்திற்கு வரவேண்டும்;“ “தன் மனைவியை இழந்த டேவின் ஆறுதலுக்காக" இதுபோன்ற ஜெப விண்ணப்பங்களை எங்களின் ஜெப ஊழியக் குழு வாரந்தோறும் பெறுகிறது. நாங்கள் அதற்காக ஜெபித்து, பதில் கடிதத்தையும் அனுப்புவது வழக்கம். ஜெப விண்ணப்ப பட்டியல் பெரிதாய் இருப்பதினால், எங்களுடைய முயற்சி கவனிக்கப்படாத வகையில் சிலவேளைகளில் இருக்கும். ஆனால் சமீபத்தில் டேவ் என்பவர் இறந்துபோன தன்னுடைய மனைவியின் இரங்கல் செய்தியின் நகலுடன், ஓர் நன்றிக் கடிதத்தையும் வைத்து அனுப்பியிருந்தார். அதைப் பார்த்த பின்பு எங்களுடைய சோர்வான சிந்தை மாறியது. ஜெபம் மிகவும் அவசியம் என்பதை நான் புதிதாக உணர்ந்தேன்.

நாம் ஊக்கமாக, இடைவிடாமல், நம்பிக்கையுடன் ஜெபிக்கவேண்டும் என்று இயேசு முன்மாதிரியாகக் கூறினார். பூமியில் அவருடைய வாழ்ந்த காலம் குறைவாகவே இருந்தது. ஆனால் அவர் ஜெபிப்பதற்காக தனி நேரம் செலவழிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தார் (மாற்கு 1:35; 6:46; 14:32).

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்ரவேலின் ராஜாவான எசேக்கியாவும் இந்தப் பாடத்தைக் கற்றுக்கொண்டார். ஓர் வியாதியின் நிமித்தம் அவர் சீக்கிரம் மரிக்கப்போகிறார் என்று அறிவிக்கப்பட்டது (2 இராஜாக்கள் 20:1). எசேக்கியா வேதனையோடும் வியாகுலத்தோடும், “தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு” (வச. 2) கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினார். இந்த விஷயத்தில் தேவன் உடனே பதில்கொடுக்கிறார். தேவன் எசேக்கியாவின் வியாதியை சுகமாக்கி, அவருக்கு பதினைந்து ஆண்டுகள் ஆயுசுநாட்களை பெருகப்பண்ணி, அவருடைய எதிரிகளிடமிருந்து இளைப்பாறுதலையும் வாக்குப்பண்ணுகிறார் (வச. 5-6). எசேக்கியா நல் வாழ்க்கை வாழ்ந்தார் என்பதற்காக தேவன் இந்த கிருபைகளை அவருக்குக் கொடுக்கவில்லை, மாறாக, “என் நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும்” தேவன் அவருக்கு கிருபையளிப்பதாக கூறுகிறார். நாம் கேட்கிற அனைத்தையும் தேவனிடத்திலிருந்து பெறாமல் இருக்கலாம், ஆனால் தேவன் நம்முடைய அனைத்து ஜெபங்களையும் கேட்டு கிரியை நடப்பிக்கிறவராயிருக்கிறார் என்பதை நாம் உறுதியாக நம்பலாம்.

 

நாம் நம்பத்தகுந்த சிருஷ்டிகர்

மேரி ஷெல்லியின் “ஃபிராங்கண்ஸ்டைன்” என்ற பிரபல நாவலில் உள்ள “அரக்கன்” மிகவும் பரவலாக அறியப்பட்ட இலக்கிய பாத்திரங்களில் ஒன்றாகும். ஆனால் அந்த நாவலை ஆழமாய் படித்தவர்கள், அந்த அரக்கனை தோற்றுவித்த மாயை விஞ்ஞானியான விக்டர் ஃபிராங்கண்ஸ்டைனையே உண்மையான அரக்கனாக ஷெல்லி சித்தரிக்கிறார் என்று அறிவர். புத்திசாலித்தனமான உயிரினத்தை உருவாக்கிய பிறகு, விக்டர் அதற்கு வழிகாட்டுதல், தோழமை அல்லது மகிழ்ச்சியின் நம்பிக்கையை கொடுக்க மறுக்கிறார். அந்த உயிரினம், விரக்தி மற்றும் கோபப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறது. ஓர் தருணத்தில் அந்த உயிரினம் விக்டரைப் பார்த்து, “என் படைப்பாளியே, நீ என்னை துண்டு துண்டாக கிழித்து வெற்றி பெறும்” என்று கூறுவதைப் பார்க்கமுடியும். 

ஆனால் தன் படைப்புகள் மது தீராத அன்புகொண்ட மெய்யான சிருஷ்டிகர் எப்பேற்பட்டவர் என்பதை வேதம் வெளிப்படுத்துகிறது. ஏதோ சிருஷக்கவேண்டும் என்பதற்காக தேவன் உலகத்தை படைக்கவில்லை, மாறாக, அதை அழகாகவும் நேர்த்தியாகவும் படைத்திருக்கிறார் (ஆதியாகமம் 1:31). ஆனால் கொடூரமான தீமையைத் தேர்ந்தெடுக்க மனிதகுலம் அவரிடமிருந்து திசைமாறியபோதும், மனிதகுலத்திற்கான தேவனுடைய அர்ப்பணிப்பும் அன்பும் மாறவில்லை.

நிக்கோதேமுக்கு இயேசு விளக்கியதுபோல், தன்னுடைய ஒரே பேறான குமாரனை இந்த உலகத்திற்காய் பலியாய் கொடுக்குமளவிற்கு இந்த உலகத்தின்மீதான தேவனுடைய அன்பு விலையேறப்பெற்றது (யோவான் 3:16). இயேசு தம்மையே பலியாய் ஒப்புக்கொடுத்து, நம்முடைய பாவத்தின் விளைவுகளைச் சுமந்துகொண்டு, “தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு” (வச. 15) நம்மை உயர்த்துகிறார். 

நாம் மனப்பூர்வமாய் நம்பக்கூடிய ஓர் சிருஷ்டிகர் நமக்கு இருக்கிறார்.